சாந்தி தவம்: சாந்தி தவம் விளக்கம்
மூலாதாரம் முதுகந்தண்டின் அடிப்பகுதியாகும். ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்வுச் சுரப்பியை இது குறிக்கும். எனவே, மூலாதாரத்தில் நின்று தவம் இயற்றும்போது, அந்த இடத்தில் அதாவது உடலின் உள்ளே நினைவைச் செலுத்தி தவம் இயற்ற வேண்டும்.
இதற்குச் சாந்தியோகம் என்று பெயர். முதுகந்தண்டின் அடிப்பகுதியில், ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் உயிரே மனதைக் குவிக்க வேண்டும். அப்போது சாந்தியோகம் எளிதில் பிடிபடும். இது மிகவும் முக்கியமானது.

வேக வாகனத்தை இயக்கக் கற்றுக் கொடுக்கும்போது ஆக்ஸிலேட்டரை அழுத்தக் கற்றுத் தருபவர், கூடவே பிரேக்கையும் காட்டிக் கொடுத்து, அதன் மதிப்பையும், உபயோகத்தையும் சொல்லித் தருவார். அதுபோல், உயிராற்றலை ஆக்கினைக்கு,ம் அதற்கும் மேலேயும் தூக்கி நிறுத்திப் பழகுதல்தான் தன்னிலை விளக்கத்தையும் ஆன்மிக உயர்வையும் தரும் என்றாலும், தவக்கனல் பல காரணங்களால் கட்டு மீறுகின்ற போதும், வேறு சில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை அதனது பழைய இடத்திலேயே நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.
இந்த சாந்தி யோகம் என்னும் மூலாதாரத் தவத்தை முற்காலத்தினர் அறிந்திருக்கவில்லை. அதனால், முற்காலத்தில் தவமியற்றுதல் என்பது உயிருக்கே ஆபத்தான காரியமாக இருந்திருக்கிறது. பிரமை, பைத்தியம் போன்ற கொடிய வியாதிகளும் நேர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது சற்றும் அந்தப் பயம் கிடையாது. யோக சாதனையின் அதீதத்தின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின் காரணமாகவோ அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தனித்துக் கொள்ளவும், அந்தத் தவக் கனலின் அதீதத்தை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக் கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது.
“தவவேகம் உடல்பலத்தை மீறும்போது
தணித்திடவும் வழியுண்டாம். அதைக்காணாமல்,
சிவநிலையை அடைவதற்குத் தவமிருந்து,
சித்தியடை யாமுன்னம் கனல்மி குந்து
சிவநிலையை அடைந்தார் முன் னாளில் பல்லோர்
சற்றுமிப்போ தந்தபயம் இங்கே இல்லை;
நவயுகத்திற் கேற்றபடி, வாழ்க்கை ஊடே
“நான்” என்னும் நிலையைறியும் மார்க்கம் ஈதாம்.”

மூலாதாரத்திலிருந்து உணர்வு மேலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய உயிராற்றலானது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும்போது சிதைவையும், இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை: மாதவிலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை, நாயின் அருகாமை, பன்றியின் அருகாமை மற்றும் பிணத்தின் அருகாமை.
தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தச் சூழ்நிலைகள் ஏதேனும் ஒன்றில் இருந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அப்போது உடனே சாந்தியோகத்திற்கு வந்துவிட வேண்டும். அதாவது, உணர்வை ஆக்கினையில் வைக்காது மூலாதாரத்திற்கு இறங்கி விட வேண்டும். அப்போது நாம் எந்த இழப்புக்கும் உள்ளாக மாட்டோம். மாதவிலக்கில் இருக்கும் பெண்டிர் சமைத்த உணவை உண்ண வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் நேர்ந்தால், அப்போது கூட, இறங்குபடியில் இருந்து கொண்டு உண்ண வேண்டும். அப்போதுதான் உயிராற்றலின் இழப்பிலிருந்து தப்பலாம்.
மேலே சென்று விட்ட நாம் கீழே இறங்கி நின்று தவம் இயற்றுவதால், இதற்கு இறங்குபடி என்றும் ஒரு பெயர் உண்டு. தவக்கனைலை இறக்கிச் சாந்தி தருவதால் சாந்தியோகம் என்றும் பெயர்.
நினைத்தவுடன் சட்டென்று மூலாதாரத்திற்கு இறங்கி விடும் திறன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குண்டலினி யோகப் பயிற்சியின் ஆரம்பக்காலத்தில் நான்கு நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரை சாந்தி யோகத்திலேயே இருக்க வேண்டும்.
ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை உணவிற்கு பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. உண்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களைப் பார்த்துக் கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஆரம்பப் பயிற்சியாளரும் சரி, முதிர்ந்த பயிற்சியாளரும் சரி, வாரத்தில் இரண்டு வேளை (வெள்ளி காலை, மாலை) கட்டாயம் சாந்தியோகம் மட்டுமே பயில வேண்டும். அதேபோல் உலக அமைதித் தற்சோதனை மௌனநோன்பு அன்று படுக்கப் போகும் முன் இயற்றப் பெறும் கடைசி வேலைத் தவம் முழுக்க முழுக்க இறங்குபடித் தனமாகவே இயற்ற வேண்டும்.

வாழ்த்துக்கூட இறங்குபடியில் நின்றே கூற வேண்டும். பஞ்ச பூதத் தத்துவத்தில் மண் ஆகிய பிருதிவிக்கு உரிய ஸ்தானம் மூலாதாரம். இங்கு நின்று தவம் ஆற்றுவதால் பூகர்ப்ப ஆராய்ச்சி பற்றிய அறிவு விருத்தி ஆகும்.
ஒரு குண்டலினியோகி தவமியற்றிச் சேமித்து வைத்துள்ள தவ சக்தியின் மிகுதியானது சாந்தியோகத்தின் பயனாக உடல் சக்தியாக மாறுகிறது. அது உடல் நலனுக்கும் நோய் எதிர்ப்புக்கும் பயன்படும். உடல் வலி, ஜூரம், அஜீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தியோகத்தால் நீங்கும். மலச்சிக்கல் விலகும். உடலில் உயிரின் இயக்கம் சீராகும்.
ஒரு நுட்பத்தைக் கவனியுங்கள்: முன்னர் மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருந்ததற்கும், இப்போது சாந்தி யோகத்தில் நம் அதே சக்தியை மூலாதாரத்தில் தேக்கித் தவம் இயற்றுதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. அவற்றை ஆராய்வோம்.
முன்னர் மயக்க நிலை, இப்போது விழிப்பு நிலை. மூலாதாரத்தில் நின்றாலும் சாந்தயோகத்தின்போது மனம் விழிப்பில்தான் இருக்கிறது. எனவே மனதின் சக்தி குறைந்து விடுவதில்லை. ஆகவே சாந்தியோகத்தின்போது வாழ்த்துக் கூறுதலும் பொருத்தமானது தான்.
முன்னர் மூலாதாரத்தில் உயிராற்றல் இருந்தது தெரியாது. இப்போது சாந்தி யோகத்தில் அது இருப்பது தெரிகிறது. அதன் அசைவும், அழுத்தமும் மனதிற்குப் புலப்படுகின்றன. அவற்றைக் கவனித்தல் மனதிற்கு ஓர்மை நிலைப்பயிற்சியாகவும் அமைகிறது.
சாந்தியோகத்தின் காரணமாக, தேவைக்கேற்ப உடல் சக்தியை மனோ சக்தியாகவும், மனோசக்தியை உடல் சக்தியாகவும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறோம். எனவே இதன் மதிப்பையும், உயர்வையும் போற்றி உரியவாறு இத்தவத்தைப் பயின்று வரவேண்டும்